Archives: ஆகஸ்ட் 2022

அறிவு காயப்படுத்தும்போது

கிராண்ட் கேன்யன் வழியாக, இருபத்தைந்து நாட்கள் மிதவைப் படகு பயணத்திற்கு பிறகு, சாக் எல்டரும் அவரது நண்பர்களும் கரை வந்துசேர்ந்தனர். அவர்களின் படகுகளை மீட்டெடுக்க வந்த நபர் கோவிட்-19 வைரஸ் பற்றி அவர்களிடம் கூறினார். அவர்கள் அதை நம்பவில்லை, அவர் கேலி செய்கிறார் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறியதும் அவர்களின் தொலைபேசிகள் பெற்றோரின் அவசர செய்திகளுடன் வந்து சேர்ந்தன. சாக்கும் அவனது நண்பர்களும் திகைத்தனர். அவர்கள் மீண்டும் ஆற்று பயணத்திற்கு திரும்பிப்போய் தற்போதைய தொற்று பிரச்சனையிலிருந்து விடுபட எண்ணினர்.

பாவ உலகத்தில், அறிவானது வேதனையை கூட்டக்கூடியதாயிருக்கிறது. பிரசங்கி புத்தகத்தில் ஞானி, “அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்” (1:18) என்று குறிப்பிடுகிறார். குழந்தையின் அறியாமையைக் கண்டு பொறாமை கொள்ளாதவர் யார்? காரணம் இனவெறி, வன்முறை மற்றும் புற்றுநோய் பற்றி குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது. நாம் வளர்ந்து, நம்முடைய பலவீனங்களையும் தீய எண்ணங்களையும் பகுத்தறிவதற்கு முன்பு மகிழ்ச்சியாக இருக்கவில்லையா?

எங்கள் மாமா ஏன் அதிகமாக குடிக்கிறார் அல்லது எங்கள் பெற்றோரின் விவாகரத்துக்கு என்ன காரணம்? போன்ற குடும்ப இரகசியங்களை அறிவதற்கு முன்பு நாம் மகிழ்ச்சியாய் இருக்கவில்லையா?

அறிவின் வேதனை விரும்பத்தக்கதல்ல. ஆனால் அவற்றை சகித்துக்கொள்ளவும், அதில் வளரவும் நம்மை ஊக்குவிக்கும், ஒரு உயர்ந்த அறிவு இருக்கிறது. இயேசு என்னும் தேவனுடைய வார்த்தையே நம்முடைய

இருளில் பிரகாசிப்பிக்கும் ஒளி (யோவான் 1:1-5). “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (1 கொரிந்தியர் 1:30). இயேசுவிடம் சரணடைவதற்கு உங்களுடைய வேதனையே ஒரு காரணம். அவர் உங்களை அறிந்திருக்கிறார், உங்களை பாதுகாக்கிறார்.

விளக்கை எரியவிடுங்கள்

ஓட்டல் வணிகத்தின் ஒரு சிறிய கட்டிடம் இருந்தது. அது ஒரு இரவு நேரம். அந்தக் கட்டிடத்தை சுற்றி எதுவும் இல்லை. அந்தக் கட்டிடத்தின் வராந்தா கதவின் அருகில் இருந்த விளக்கிலிருந்து மட்டும் சிறிய வெளிச்சம் வந்தது. பயணிகள் படிகளில் ஏறிச்சென்று கட்டிடத்திற்குள் நுழைவதற்கு அந்த ஒளி போதுமானதாயிருந்தது. அங்கே “உங்களுக்காக நாங்கள் விளக்கை எரிய விடுகிறோம் & quot; என்னும் வாசகம் எழுதப்பட்டிருந்தது. சோர்வோடு வரும் பயணிகள் தங்கி இளைப்பாறுவதற்கு அந்த விளக்கு வரவேற்படையாளமாய் அமைந்தது.

இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் அந்த வரவேற்பு விளக்கைப் போன்றவர்கள் என்று இயேசு சொல்லுகிறார். அவர் தன்னை பின்பற்றுபவர்களைப் பார்த்து, “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது” (மத்தேயு 5:14) என்றார். விசுவாசிகளாகிய நாமும் இருள் சூழ்ந்த உலகத்திற்கு ஒளியாக திகழ்கிறோம்.

மேலும் அவர் “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி” (வச. 16) நம்முடைய வெளிச்சத்தை பிரகாசிக்கும்படிக்கு கூறுகிறார். நம்முடைய விளக்கை அணையாமல் எரியச் செய்தால், நாம் பலரை நம்மிடமாய் வரவேற்று, மெய்யான ஜீவ ஒளியான கிறிஸ்துவை (யோவான் 8:12) அறிந்துகொள்ளும்படி செய்யலாம். சோர்ந்துபோன, இருள் சூழ்ந்த உலகத்தில் அவருடைய விளக்கு அணையாமல் எரிகிறது.

உங்கள் விளக்கு எரிந்துகொண்டிருக்கிறதா? இயேசு உங்கள் மூலமாய் விளக்கை பிரகாசிக்கச்செய்யும்போது, மற்றவர்கள் அதைப் பார்த்து அவ்வெளிச்சத்தைத் தங்களிலும் பிரகாசிக்கச்செய்வார்கள்.

காலத்தின் விதைகள்

1879 ஆம் ஆண்டில் வில்லியம் பீலுடைய செய்கைகள் பார்ப்பவர்களுக்கு முட்டாள்தனமாய் தெரிந்தது. ஏனெனில் தாவரவியல் பேராசிரியரான அவர் இருபது பாட்டில்களில் விதைகளை நிரப்பி, அதை மண்ணில் புதைத்து வைத்தார். ஒரு விதையின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கும் பீலின் இந்த முயற்சியானது நூற்றாண்டுகள் நீடிக்கக்கூடியது என்பது அவர்களுக்குத் தெரியாது. ஒவ்வொரு இருபது வருடங்களும் ஒரு பாட்டிலை தோண்டியெடுத்து அது முளைத்திருக்கிறதா என்று பரிசோதிக்கவேண்டும்.

விதைக்கிறதைக் குறித்து இயேசு அநேக போதனைகளை செய்திருக்கிறார். விதைக்கிறதை கர்த்தருடைய வார்த்தையை பறைசாற்றுவதோடு ஒப்பிடுகிறார் (மாற்கு 4:15). சில விதைகளை சாத்தான் கெடுத்துப்போடுகிறான்; சில விதைகள் வேரூன்றுவதில்லை; சில விதைகள் முள்ளுகளுக்கிடையே சிக்கி வளராமல் போய்விடுகிறது (வச. 15-19). நாம் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் போது, எந்த விதை பலன்  கொடுக்கும் என்பது நமக்குத் தெரியாது. நம்முடைய வேலை விதைப்பது, அதாவது, சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது: “உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” (16:15).

2021ஆம் ஆண்டு, பீலின் மற்றுமொரு பாட்டில் தோண்டி எடுக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில், 142 ஆண்டுகளுக்கு மேலாக விதைகள் உயிர்பிழைத்திருக்கிறது கண்டறியப்பட்டது. நம்முடைய விசுவாசத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்படிக்கு தேவன் நம் மூலமாய் கிரியை செய்தால், நாம் பகிர்ந்துகொள்ளும் வார்த்தை எப்போது வேரூன்றும் என்று நமக்குத் தெரியாது. ஆனால் நம்முடைய நற்செய்தி விதையானது, ஒரு நாள் நிச்சயமாய் ஏற்றுக்கொள்ளப்பட்டு, “ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாக” (4:20) பலன் கொடுக்கும்.

தேவனிடம் கட்டுப்பாட்டை ஒப்படைத்தல்

சமையலறை மேடையில் பொருந்தக்கூடிய அளவிற்கு ஒரு ஆலமரத்தை கற்பனை செய்து பாருங்கள். போன்சாய் என்ற மரம் அப்படித்தான், காட்டில் நீங்கள் பார்க்கும் பெரிய ஆலமரத்தின் மிகச்சிறிய உருவமே இந்த போன்சாய் மரம். பெரிய மரத்திற்கும் இந்த போன்சாய் மரத்திற்கும் இடையே எந்த மரபணு வித்தியாசமும் கிடையாது. அதை நட்டு வைத்திருக்கிற தொட்டியின் அளவினாலும், அதின் வேர் அடிக்கடி  சுத்திகரிக்கப்படுவதினாலும் அதின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு சிறியதாகவே இருக்கிறது.

இந்த போன்சாய் மரங்கள் அழகாய் அலங்காரமாய் தெரிந்தாலும், அது கட்டுப்பாட்டை உருவகப்படுத்துகிறது. மரங்கள் அதின் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றவாறு வளர்ச்சியடைந்தாலும், அவற்றை வளரச் செய்வது தேவனே.

தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசியிடத்தில், “கர்த்தராகிய நான் உயர்ந்த விருட்சத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த விருட்சத்தை உயர்த்தினேன்” (எசேக்கியேல் 17:24) என்று பேசுகிறார். பாபிலோனிய சிறையிருப்பை அனுமதிப்பதின் மூலம் இஸ்ரவேல் தேசத்தை “வேறோடு பிடுங்கும்” எதிர்காலத்தைக் குறித்து தேவன் முன்னறிவிக்கிறார். ஆகிலும் தேவன் இஸ்ரவேலில் கனி தரக்கூடிய ஒரு புதிய விருட்சத்தை ஓங்கி வளரச்செய்வார்; அதின் நிழலில் “சகலவிதப்பட்சி ஜாதிகளும்” வந்து அடைக்கலம் தேடும் (வச. 23).

சம்பவிக்கப்போகிற நிகழ்வுகள் அனைத்தும் கட்டுப்பாட்டை மீறியதாக தென்பட்டாலும், தேவன் அதை கட்டுக்குள் வைத்திருந்தார். இந்த உலகம், நம்முடைய சூழ்நிலைகளால், கடின உழைப்பின் மூலம் நாமே கட்டுப்படுத்த முடியும் என சொல்லுகிறது. ஆனால் வளரச்செய்யும் தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போதே, மெய்யான சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விசுவாசத்தின் ஜெயம்

நான்கு வயது சிறுவனான கால்வினின் வழக்கமான சரீர ஆரோக்கிய சோதனையில் அவனது உடலில் சில எதிர்பாராத புள்ளிகள் கண்டறியப்பட்டன. அவனுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, ஊசி போடப்பட்டு, அந்த இடத்தை கட்டுகட்டி அனுப்பினர். அந்த கட்டை அகற்றும் நாளில், அவனுடைய தந்தை கட்டை பிரிக்க முயன்றபோது, கால்வின் பயத்துடன் சிணுங்கினான். மகனுக்கு ஆறுதல் கூற முயன்று, அவனது தந்தை, “கால்வின், உன்னைக் காயப்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உனக்குத் தெரியும்!" என்று சொன்னார். கட்டை அகற்றும் பயத்தைவிட, தன் மகன் தன்னை நம்பவேண்டும் என்று அவனது தந்தை விரும்பினார்.

அசௌகரியத்தினால் நான்கு வயது குழந்தைகள் மட்டும் பயம் அடைவதில்லை. அறுவைசிகிச்சைகள், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், மன அல்லது உளவியல் சவால்கள் மற்றும் பலவிதமான பயங்கள், பெருமூச்சுகள், அழுகைகள் மற்றும் கூக்குரல்களை சந்திக்கும் அனைத்து தரப்பினர்களும் பயத்தினால் சூழப்படுகின்றனர். 

தாவீது, தன்மீது பொறாமைகொண்டு தன்னை கொல்ல வகைதேடிய சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்திய தேசத்திற்கு ஓடியபோதிலும், அங்கு அவர் கண்டுபிடிக்கப்பட்ட தருணம், வாழ்க்கையின் பயம் மிகுந்த ஓர் தருணமாயிருந்துள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டபோது, அவருக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டார். (1 சாமுவேல் 21:10-11): “தாவீது... காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டான்.” இந்த சங்கடமான சூழ்நிலையைப் பற்றி யோசித்து, தாவீது “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்… தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்” (சங்கீதம் 56:3-4) என்று எழுதுகிறார். 

வாழ்க்கையின் அசௌகரியங்கள் நமக்கு அச்சத்தைத் தூண்டும்போது நாம் என்ன செய்வோம்? நம்முடைய பரலோகத் தகப்பன்மீது நம்பிக்கை வைக்கலாம்.

 

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

 

நாம் நம்பத்தகுந்த சிருஷ்டிகர்

மேரி ஷெல்லியின் “ஃபிராங்கண்ஸ்டைன்” என்ற பிரபல நாவலில் உள்ள “அரக்கன்” மிகவும் பரவலாக அறியப்பட்ட இலக்கிய பாத்திரங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த நாவலை ஆழமாய் படித்தவர்கள், அந்த அரக்கனை தோற்றுவித்த மாயை விஞ்ஞானியான விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனையே உண்மையான அரக்கனாக ஷெல்லி சித்தரிக்கிறார் என்று அறிவர். புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்கிய பிறகு, விக்டர் அதற்கு வழிகாட்டுதல், தோழமை அல்லது மகிழ்ச்சியின் நம்பிக்கையை கொடுக்க மறுக்கிறார். அந்த உயிரினம், விரக்தி மற்றும் கோபப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஓர் தருணத்தில் அந்த உயிரினம் விக்டரைப் பார்த்து, “என் படைப்பாளியே, நீ என்னை துண்டு துண்டாக கிழித்து வெற்றி பெறும்” என்று கூறுவதைப் பார்க்கமுடியும். 

ஆனால் தன் படைப்புகள் மது தீராத அன்புகொண்ட மெய்யான சிருஷ்டிகர் எப்பேற்பட்டவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. ஏதோ சிருஷக்கவேண்டும் என்பதற்காக தேவன் உலகத்தை படைக்கவில்லை, மாறாக, அதை அழகாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் (ஆதியாகமம் 1:31). ஆனால் கொடூரமான தீமையைத் தேர்ந்தெடுக்க மனிதகுலம் அவரிடமிருந்து திசைமாறியபோதும், மனிதகுலத்திற்கான தேவனுடைய அர்ப்பணிப்பும் அன்பும் மாறவில்லை.

நிக்கோதேமுக்கு இயேசு விளக்கியதுபோல், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்காய் பலியாய் கொடுக்குமளவிற்கு இந்த உலகத்தின்மீதான தேவனுடைய அன்பு விலையேறப்பெற்றது (யோவான் 3:16). இயேசு தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்துகொண்டு, “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (வச. 15) நம்மை உயர்த்துகிறார். 

நாம் மனப்பூர்வமாய் நம்பக்கூடிய ஓர் சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார்.